எரித்திரியாவில் புலிகளின் 12 விமானங்கள்-நாளேடு
கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளேடான லங்காதீப இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,
புலிகள் இயக்கத்துக்கு நெருக்கமான நிறுவனம் ஒன்று எரித்திரியாவில் விமான நிலையங்களை பராமரித்து வருவதாகவும், அவற்றில் ஒரு விமான நிலையத்தில்தான் இவை நிறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் இப்போது பயிற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவாம். தற்போது இலங்கை ராணுவத்தின் பிடியில் உள்ள செல்வராசா பத்மநாதன்தான் இந்தத் தகவல்களைக் கொடுத்துள்ளதாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.
போர் உச்சகட்டத்திலிருந்த போது, புலிகளிடம் 6 விமானங்கள் இருந்ததாக இலங்கை ராணுவமே செய்தி பரப்பி வந்தது. ஆனால் போர் முடிந்த போது, அந்தப் பிரதேசத்தில் ஒரு விமானம் கூட இல்லை. அவை எப்படி மாயமாகின என்றும் தெரியவில்லை.
லங்கா தீப மேலும் கூறியுள்ளதாவது:
"எரித்திரியாவுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்கள் கடந்த பல வருடங்களாகவே வெளியாகி வந்துள்ளன. இவ்வாறு எரித்திரியாவின் கடல் பகுதியில் புலிகள் அமைப்பின் கப்பல்கள் தரித்து நிற்பதாகவும், எரித்திரியாவில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்து வருவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தற்போது பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களின்படி புலிகளுக்குச் சொந்தமான 12 சிறியரக விமானங்கள் எரித்திரியாவில் இருப்பதாகவும், இவை எரித்திரியாவின் விமான நிலையத்திலேயே இன்னும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புப் புலனாய்வுத்துறை மேற்கொண்ட விசாரணைகளில், எரித்திரிய வானூர்தி நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 12 விமானங்களும் முன்னர் வான்புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயனபடுத்திய சிலின் - 143 ரகத்தைச் சேர்ந்த வானூர்திகளே என்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனால் மீண்டும் எந்த நேரத்திலும் விமானத் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் இலங்கை ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே முழுமையான விசாரணைகளை இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் எரித்திரிய பாதுகாப்புத் தரப்பினருடனும், அந்நாட்டின் விமான நிலைய அதிகாரிகளுடனும் மேற்கொள்ளவிருக்கின்றனர்..." என்று கூறப்பட்டுள்ளது.
வன்னியில் கடைசி கட்ட போரின்போது, பிரபாகரனை அங்கிருந்து வெளியேறி தங்கள் நாட்டுக்கு வருமாறு எரித்திரியா அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.