குமரி-கடற்கரையை பாதுகாக்க கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு
மதுரை: கன்னியாகுமரி கடற்கரையை அதன் பழமை மாறாமல் பாதுகாக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கலை, பண்பாடு மற்றும் பராம்பரிய இந்திய தேசிய அறக்கட்டளையின் தலைவர் லால் மோகன் என்பவர் சமீபத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
கன்னியாகுமரி கடற்கரையில் பூங்கா அமைக்க சந்திரன் என்பவருக்கு கலெக்டர் டெண்டர் கொடுத்துள்ளார். கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்குள் எவ்வித கட்டுமானங்களும் இருக்ககூடாது என விதி உள்ளது. ஆனால் 100 மீட்டருக்குள் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
இதனால் கடற்கரை பகுதியில் இருக்கும் 40 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பூங்கா அமைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வி. ராமசுப்ரமணியன், டி. அரிபரந்தாமன் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள்,
கடற்கரையை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் மூன்று வாரங்களுக்குள் ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும். அந்த கமிட்டி பூங்கா அமைப்பது குறித்த அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் போது டெண்டர் எடுத்தவர் உடனிருக்கலாம். அப்போது இதிலிருக்கும் சர்ச்சைக்குரிய அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், டெண்டர் எடுத்தவருக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது கருத்தையும் கேட்க வேண்டும். கடற்கரையின் தற்போதைய அமைப்பு அம்சங்கள், பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications