மாநகராட்சி ஏலம்-திமுக செயலர் மகனுக்கு அடி
வேலூர்: வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் எடுக்க சென்ற திமுக நகரச் செயலரின் மகனுக்கு அடி, உதை விழுந்தது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் 24 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் விடுவதற்கு மாநகராட்சி நான்கு முறை முயன்றது. நான்கு முறையும் எதாவது ஒரு பிரச்சனை உருவானதால் பிரச்சனை ஏற்பட்டதால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அந்த கடைகளுக்கு ஏலம் நடைபெறும் என்று மாநகராட்சி அறிவித்தது. இதையடுத்து வைப்புத் தொகை கட்டி ஏலத்தில் கலந்து கொள்ள பலர் முன் வந்தனர்.
வேலூர் திமுக நகரச் செயலர் அ.மா. ராமலிங்கத்தின் மகன் ஆர். தினேஷ்குமார் என்பவர் 1 முதல் 4 எண்கள் கொண்ட கடைகளை ஏலம் எடுக்க ஒப்பந்த படிவம் கேட்கச் சென்றார். அப்போது சிலர் அவரை மடக்கி, அந்த கடைகளுக்கு ஏலம் கேட்கக் கூடாது என்று கூறி அடித்து உதைத்தனர்.
இதையடுத்து தினேஷ்குமார் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
போலீசார் புகாரின் பேரில் மாநகராட்சி உறுப்பினர் ஆர். சத்தியமூர்த்தி, சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த பால முரளி கிருஷ்ணன், மாநகராட்சி உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் மாநகராட்சி உறுப்பினர் ஆர். சத்தியமூர்த்தி தன்னை தினேஷ்குமார் தாக்கியதாக புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் தினேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பிரச்சனையை அடுத்து மாநகராட்சி ஏலம் ஐந்தாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications