இலங்கைக் கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து ராமேஸ்வரம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ராமேஸ்வரத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி துன்புறுத்தி வருகின்றனர்.
மேலும் மீனவர்களின் உடைமைகளை பறிமுதல் செய்தும், வலைகளை அறுத்து எறிந்து கடலில் வீசும் கொடுமையும் நடைபெற்று வருகின்றது.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையால் மீனவர்கள் பலத்த நஷ்டம் அடைவதோடு கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மேலும், கடந்த 19 - ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்துள்ளனனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தொடர் தாக்குதல் நடவடிக்கையை கண்டித்தும், பாக்ஜலசந்தி, மன்னார் கடல் பகுதியில் தமிழக மீனவர்களுக்கான மீன்பிடி உரிமையை பெற்று தர கோரியும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உண்ணாவிரத்தில் ராமேஸ்வரம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மீனவர்களின் உண்ணாவிரத்தால் அதனை சார்ந்துள்ள தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.