கருணாநிதி முன்னிலையில் காங். எம்எல்ஏக்கள் பதவியேற்பு
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
சமீபத்தில் நடந்த ஐந்து தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
கம்பம், இளையாங்குடி, பர்கூரில் திமுகவும், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் காங்கிரஸும் வெற்றி பெற்றனர்.
திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேரும் சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவரும் பதவியேற்றனர்.
தொண்டாமுத்தூர் கந்தசாமி, ஸ்ரீவைகுண்டம் சுடலையாண்டி ஆகியோர் சபாநாயகர் ஆவுடையப்பனின் அறையில் பதவியேற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில், பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்,
துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, காயத்ரி தேவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இந்த இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. மத்தியில் சோனியாகாந்தி ஆலோசனைப்படி நடைபெறும் அரசும், தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் நடைபெறும் அரசும் சிறப்பான சாதனைகளை செய்து வருகின்றன. அந்த சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி இது. இந்த வெற்றி தொடரும். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழ்நாடு வருவது குறித்து பின்னர் விவரமாக தெரிவிக்கப்படும் என்றார்.
பதவியேற்றவுடனேயே ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சுடலையாண்டி துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.
அதில், தாமிரபரணி ஆற்று குடிநீர் இணைப்பு பெறாத 87 கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார்.