கோவை-திருப்பூரில் நாளை இந்து முன்னணி பந்த்
திருப்பூர்: திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நாளை திருப்பூர், கோவையில் பந்த் நடத்தப்படும் என அதன் மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன், ஊர்வலம் மீது சில விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக மிக அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டு வருகிறது
கடந்த 14 ஆண்டுகளாக வழக்கமான முறையில், எவ்வழியாக விநாயகர் ஊர்வலம் நடந்ததோ, அதே முறைப்படி இந்தாண்டும் விநாயகர் ஊர்வலம் நடந்தது. ஆனால், சில விஷமிகள் வேண்டும் என்றே கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் மீதும் கற்கள் வீசிப்பட்டுள்ளது.
அதேபோல், விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு, அமைதியாக திரும்பியவர்கள் மீதும் காங்கேயம் ரோட்டில் பயங்கர ஆயுதங்களுடன் திரண்டிருந்த கும்பல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், வேனை அடித்து நொறுக்கி, அதில் இருந்த மூவரை தாக்கியுள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூர் மற்றும் கோவையில் நாளை 28.08.2009 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பந்த் நடைபெறும்.
இந்த பந்த்க்கு அனைத்து தரப்பு பொது மக்களும் ஆதரவு தர வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.