காங். இன்றி திமுக ஆட்சியில்லை-ஞானசேகரன்
வேலூர்: திமுக இல்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்த முடியும், நாம் ஆதரவு தந்தால் தான் கருணாநிதியால் முதல்வராக இருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் கலந்து கொண்டு பேசுகையில்,
திமுக இல்லாமல் கூட மத்தியில் காங்கிரசினால் ஆட்சி நடத்த முடியும். திமுகவிற்கு 99 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். அமைச்சர் பதவி தராவிட்டாலும் பரவாயில்லை என கூட்டணி தர்மத்துக்காக நாம் அவர்களை அனுசரித்துப் போகிறோம்.
காங்கிரஸ் இல்லாமல் திமுகவினால் ஆட்சி நடத்த முடியாது. நாம் ஆதரவு தந்தால் தான் கருணாநிதியால் முதல்வராக இருக்க முடியும்.
ஆனால், திமுகவினர் நமக்கு எந்த பொறுப்பையும் தரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றனர். ஏன், கோவில் அறங்காவலர் பதவியை கூட காங்கிரஸ்காரர்களுக்கு தர மறுக்கின்றனர்.
திமுக பணத்தால் சாதிக்க நினைக்கிறது...
தமிழகத்தில் 2010ம் ஆண்டு தேர்தலை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என திமுக நினைக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போன்று, எப்போதும் வெற்றி பெற்று விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர். நம்முடன் கூட்டணியில் இருப்பவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும்.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி தொடர்ந்தால் நமக்கு சரிவுதான் ஏற்படும். அதனால், நாம் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் இளைஞர் பட்டாளத்தை நாம் சேர்க்க வேண்டும். அப்போதுதான் கட்சி உயிரோட்டமாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications