ராஜபக்சேவின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்து-சிபிஐ
மதுரை: ராஜபக்சே அரசின் தமிழ் இன அழிப்பை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் 13வது மாநில மாநாட்டு நடைபெற்றது. மாநாட்டு பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா பேசுகையில்,
வன்னி முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாகி வருகின்றனர். உணவு, மருந்து, சுகாதார வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.
தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண விருப்பமில்லாத அதிபர் ராஜபக்சே தலைமையிலான அரசு இன அழிப்பைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்காக இந்திய அரசு கொடுத்த ரூ 500 கோடி நிதியுதவி என்ன ஆனது, அது தமிழர்களுக்கு போய் சேர்ந்ததா என்பது தெரியவில்லை. அது குறித்து இலங்கை அரசு தெளிவுபடுத்தவில்லை.
ஈழத் தமிழர்கள் 180 நாட்களில் தங்கள் இருப்பிடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ராஜபக்சே உறுதி அளித்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார்.
ஆனால், அவர் சொல்லும் 180 நாட்கள் என்ற கணக்கு எப்போது தொடங்குகிறது, எப்போது முடிகிறது என்பதை இதுவரை யாரும் சொல்லவில்லை என்றார்.