மாஜி அமைச்சர் என்கேகேபி ராஜாவுக்கு பிடிவாரண்ட்
ஈரோடு: ஆள் கடத்தல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து, முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா உள்ளிட்ட ஏழு பேருக்கு, பெருந்துறை நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை கல்லாங்குத்து தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி. இவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன், தம்பி குகமணி.
இவர்கள் நான்கு பேரும் கடந்த ஆண்டு சொத்துக்காக மர்ம நபர்கள் மூலம் கடத்தப்பட்டனர். இந்த கடத்தலுக்கு காரணம் என அப்போதைய, கைத்தறித்துறை அமைச்சர் ராஜா உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலையீட்டால், கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரனைக்கு மாற்றப்பட்டது. வழக்கின் முக்கிய சாட்சியான சிவபாலன், கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்தார்.
கடந்த ஜூலை 16 ம் தேதி, கர்நாடக மாநிலத்தில் சுற்றித்திரிந்த சிவபாலனை, சி.பி.சி.ஐ.டி போலீசார் மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சிவபாலன் மூன்று நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, 27 பக்க ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தன்னை மாஜி அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாதான் கடத்தினார் என்று வாக்கு மூலம் அளித்தார்.
இதனையடுத்து, மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஆள் கடத்தல், வீடு இடிப்பு, பழனிசாமியின் தந்தை சின்னசாமி இறந்தது, சிவபாலனை மீட்டுத் தரக்கோரி அவரது தாயார் கொடுத்த புகார் என, நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், ஆள் கடத்தல் மற்றும் வீடு இடிப்பு வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரிக்கின்றனர். மற்ற இரண்டு வழக்கையும் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக, பெருந்துறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி.போலீசார் கடந்த 11 ம் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா உட்பட 30 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் என்.கே.கே.பி. ராஜா 14 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதை பெருந்துறை நீதிமன்றம் நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டது.
இந்த வழக்கிகல் என்.கே.கே.பி. ராஜா உள்ளிட்ட ஏழு பேர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா, ஈரோடு மாவட்ட தி.மு.க. துணைத்தலைவர் விஸ்வநாதன், சுந்தரம், சுந்தர்ராஜன், சின்னப்பன், மணியக்காரர் குமார், பெருந்துறை சார்பதிவாளர் அன்பழகன் ஆகிய ஏழு பேரையும் கைது செய்யும்படி, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications