பன்றிக் காய்ச்சல் - புனேவில் 26வது பலி: நாடு முழுவதும் 93 பேர் மரணம்
டெல்லி : இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 100ஐ நெருங்கி விட்டது. இதுவரை 93 பேர் பலியாகியுள்ளனர். புனேவில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மட்டும் 139 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
நேற்று பெங்களூரில் இருவரும், பீஜப்பூரில் ஒருவரும் இறந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல கேரளாவிலும் ஒருவர் உயிரிழந்தார்.
பீஜப்பூரைச் சேர்ந்த 3 வயதான கெளடப்பா பிரதார் என்ற சிறுவன் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தான். கர்நாடகத்தில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியான மிகக் குறைந்த வயது நபர் கெளடப்பாதான்.
இவன் தவிர பெங்களூரைச் சேர்ந்த செளபாக்யா (48), அஸ்ரா கெளசர் (35) ஆகியோரும் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.
புனேவில்...
புனேவில் 28 வயதான கர்ப்பிணிப் பெண் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தார். அவரையும் சேர்த்து இதுவரை புனேவில் மட்டும் 26 பேர் இறந்துள்லனர்.
இறந்த பெண்ணின் பெயர் ரூபாலி ஜோர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதுவரை இந்தியாவில் அதிக அளவில் மகாராஷ்டிரத்தில்தான் 48 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக கர்நாடகத்தில் 23 பேரும், குஜராத்தில் 7 பேரும், தமிழ்நாடு, சட்டீஸ்கர், டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா 3 பேரும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 பேரும், கேரளா, கோவா, ராஜஸ்தான், ஹரியானாவில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications