சாத்தூர் பட்டாசு ஆலையில் விபத்து-2 பேர் பலி
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் தற்போது தீபாவளி பட்டாசுத் தயாரிப்பு மும்முரமாக உள்ளது. இந்த நிலையில் சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சமீபத்தில் அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சாத்தூர் அருகே இன்று பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை என்ற இடத்தில், உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் சங்கு சக்கரத்தில் மருந்தை சேர்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் குருசாமி மற்றும் முனுசாமி ஆகிய இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் விரைந்து வந்தனர்.