மக்கள் தொகையோ 6 கோடி - ரேஷன் கார்டுகளோ 8 கோடி - அமைச்சர் வேலு தகவல்
விழுப்புரம்: கடந்த 2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, தமிழக மக்கள் தொகை 6 கோடியே 65 லட்சத்து 66 ஆயிரம் ஆகும். ஆனால், ரேஷன் கார்டுகளோ 8 கோடி உள்ளது என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியும் தணிக்கை ஆய்வு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
தமிழக உணவுத்துறை அமைச்சர் வேலு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில்,
விலைவாசி உயர்ந்தாலும் மலிவு விலை பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் மட்டுமே மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஆதாரமே ரேஷன் கார்டுகள் தான்.
போலி ரேஷன் கார்டுகள் அதிகரித்து தவறுகளுக்கு வழி வகுக்கின்றன. இதை முறைப்படுத்த தான் தணிக்கை செய்யப்படுகின்றது.
இதன் முதற்கட்டமாக 10 மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக 16 மாவட்டங்களிலும், மூன்றாம் கட்டமாக இதர மாவட்டங்களிலும் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியும் தணிக்கை நடந்து வருகிறது.
முறையாக ஆய்வு செய்யப்பட்டதில் சென்னை அண்ணா நகரில் 58 ஆயிரத்து 307, கோவையில் 2 லட்சம், திருச்சியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 816 போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி, தமிழக மக்கள் தொகை 6 கோடியே 65 லட்சத்து 66 ஆயிரம் பேர் இருந்தனர். ஆனால், ரேஷன் கார்டுகள் 8 கோடி உள்ளன. இதிலிருந்தே போலி ரேஷன் கார்டுகள் எந்தளவு அதிகரித்துள்ளது என்பதை கண்டறியலாம்.
இறந்தவர்களின் பெயர்களை ரேஷன் கார்டுகளில் நீக்காததால் தான் இது போன்ற நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, வீடு வீடாக ஆய்வு செய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications