மதுரையில் அரசு டாக்டருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி
மதுரை: மதுரை அரசு மருத்துவமனைக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் வந்த அரசு டாக்டருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனது வீட்டிலிருந்தபடியே அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிபவர் டாக்டர் அருண்ராஜ்.
இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல், சளி இருந்தது. இதற்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொண்டும், அதன் தாக்கம் குறையவில்லை.
இதனால் அது பன்றிக் காய்ச்சல் அறிகுறியாக இருக்கலாம் என கருதி மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார்.
டாக்டர் அருண்ராஜ் தனது உடல் நிலை குறித்து டீன் சிவக்குமாரிடம் விளக்கினார். அவரது சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.
பரிசோதனை முடிவு வரும்வரை வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வதாக டாக்டர் அருண்ராஜ் கூறினார். இதை தொடர்ந்து அவருக்கு டாமி ப்ளூ மாத்திரைகள் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டார்.
திருப்பூர் மருத்துவமனையில் நோயாளி ஓட்டம்...
இதற்கிடையே திருப்பூர் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 46 வயது நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அவரது பெயர் சலீம். உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர். திருப்பூரில் வசித்து வந்தார். கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.
வியாழக்கிழமை இவர் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது ரத்தம், சளி மாதிரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென சலீம் தலைமறைவாகி விட்டார்.
9 மாதக் குழந்தைக்கு உறுதியானது...
இதற்கிடையே நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 மாதக் குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிலிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.