'ராஜவைத்தியர்' விஜயக்குமார் வீடு, மருத்துவமனையில் ரெய்டு - ஆவணங்கள் பறிமுதல்
சென்னை: கோடிக்கணக்கில் நோயாளிகளிடம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள திருவிதாங்கூர் ராஜவைத்தியர் டாக்டர் விஜயக்குமாரின் வீடு மற்றும் மருத்துவமனையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
சென்னை மயிலாப்பூரில், திருவிதாங்கூர் ராஜவைத்தியசாலை என்ற பெயரில் மருத்துவமனை வைத்துள்ளார் விஜயக்குமார். இவர் மீது கோடிக்கணக்கில் பணம் பறித்ததாக நோயாளிகள் சிலர் புகார் கொடுத்தனர்.
மான்கறி வைத்தியம், கோழிக்கறி வைத்தியம் என்று கூறி பணம் பறித்ததாக விஜயக்குமார் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஜூலை 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு பின்னர் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
விஜயகுமாரிடம், மோசம் போனதாக இதுவரை 60 பேர் புகார் கொடுத்து உள்ளனர். ரூ.3 கோடி வரை பணம் மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது மொத்தம் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதில் 2 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளது. மற்ற வழக்குகள் தொடர்பாக அவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் டாக்டர் விஜயகுமாரின் மருத்துவமனை, அலுவலகம் மற்றும் அவருடைய வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சென்னை தியாகராயநகரில் 3 நட்சத்திர ஹோட்டல் மற்றும் மதுரையில் வீடு, பழத்தோட்டம் போன்ற சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளதாகவும் கோர்ட்டு மூலம் இந்த சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
விஜயக்குமார் கைதான பின்னர் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இவை எங்கு பதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தனக்கு ஏழரை நாட்டு சனியால்தான் இவ்வவளவு தொல்லைகளும், கெட்ட பெயரும் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் விஜயக்குமார், போலீஸாரிடம் தெரிவித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications