நாங்கள் விமர்சிக்க ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள் - இளங்கோவனுக்கு வீரபாண்டியார் எச்சரிக்கை
சென்னை: திமுகவின் தயவால் எம்.பி. ஆனவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவர் நாவை அடக்கிப் பேச வேண்டாம். நாங்கள் ஆரம்பித்தால் அவரால் தாங்க முடியாது என்று எச்சரித்துள்ளார் திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவரும், வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
சமீபத்தில் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை திமுக ஆரம்பித்து வைத்திருப்பதாகவும், இதனால் தமிழ்நாட்டுக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு வீரபாண்டி ஆறுமுகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் பேசியவர், தி.மு.க.வில் இருந்தால் ஊருக்காக உழைக்க முடியாது என்பதால் அக்கட்சியில் இருந்து பலர் வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்கிறார்கள் என்றும், தமிழகத்தில் சதிகார அரசியல் நடக்கிறது என்றும் தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதன் மூலம் வாக்காளர்களையும், ஊழல் பேர்வழிகளாக ஆக்கிவிட்டார்கள் என்றும் பேசியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தி.மு.க. ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் விரைவில் தேர்தல் வரும் என்றும் பேசியிருப்பது அவருடைய அநாகரீகமான சுயவிளம்பரத்தை பறைசாற்றுகின்ற வகையில் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணிக்கு விரோதமாக பேசி இருக்கின்றார்.
2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், வெற்றி பெற்று அவர் மத்திய அமைச்சராக ஆவதற்கு, தி.மு.க.வும் காரணம் என்பதை மறந்து பேசுவது நன்றிகெட்டதனம் ஆகும். 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டபோது இவர் எங்கே போனார்?
தி.மு.க. செய்த சாதனைகளை சொல்லித்தானே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்டார். அப்போது தி.மு.க. இனித்ததா? இவர் காந்தியை போல சட்டையில்லாமல், கீழ்பாஸ் கட்டிக் கொண்டு, துண்டு அணிந்து மக்களை சந்திப்பது போல பேசுவது வேடிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று ஜோசியம் சொல்கிறார். அது நடக்கப் போவதில்லை. அப்படியே நடந்தாலும் இளங்கோவனுடைய கனவு கானல்நீராகத்தான் போகும்.
காமராஜரை கைது செய்யும் நிலை ஏற்பட்டபோது, பதவியை ராஜினாமா செய்வேனே தவிர, கைது செய்ய மாட்டேன் என்று அப்போது கலைஞர் சொன்னார். நீங்கள் ராஜினாமா செய்தால், ஜனநாயகத்தை காப்பது யார் என்று காமராஜர் சொன்னார்.
இவர் எல்லாம் காமராஜருக்கு பெருமை சேர்த்தவர் போல் பேசுகிறார். சென்னை விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரை வைத்தவர் கலைஞர். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வழிவகுத்தவர் கலைஞர்.
இதுபோன்ற செயல்களை செய்ய எப்போதாவது இளங்கோவன் கோரிக்கை விடுத்தாரா? அவர் நாவடக்கத்தோடு நடக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டது தி.மு.க. மீதா? இளங்கோவன் மீதா என்று எதிர்காலம் சொல்லும். மக்கள் நம்பிக்கை இல்லாததால்தான் தேர்தலில் இவர் தோற்றார். எனவே, இதுபோன்ற அறிக்கை விடுவதை அவர் நிறுத்திக் கொள்ளவேண்டும். நாங்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்தால் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளார் வீரபாண்டி ஆறுமுகம்.












Click it and Unblock the Notifications