மகாராஷ்டிரா, ஹரியானா, அருணாச்சல் பிரதேசம் - அக். 13ல் சட்டசபைத் தேர்தல்
தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா இன்று அறிவித்தார்.
மூன்று மாநிலங்களிலும் சட்டசபை பொதுத் தேர்தல் அக்டோபர் 13ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 22ம் தேதி நடைபெறும்.
மூன்று மாநிலங்களிலும் வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 18ம் தேதி தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 27ம் தேதி. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 29.
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 100 நாட்களை கடந்துள்ள நிலையில் வரும் முக்கிய தேர்தல் இது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாநிலங்களிலும் தற்போது காங்கிரஸ் ஆட்சியே நடந்து வருவதால் 3 மாநிலங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
விலைவாசி உயர்வுப் பிரச்சினை, வறட்சி ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாக தேர்தல் களத்தில் இருக்கும்.
ஹரியானா சட்டசபையின் ஆயுள் காலம் அடுத்த ஆண்டு வரை இருந்தாலும் கூட முன்கூட்டியே அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளும், ஹரியானாவில் 90 சீட்களும், அருணாச்சல் பிரதேசத்தில் 60 தொகுதிகளும் தேர்தலை சந்திக்கவுள்ளன.
தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து 3 மாநிலங்களிலும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.