வேலூர் கல்லூரியில் மாணவியிடம் சில்மிஷம்- பேராசிரியர் கைது
வேலூர்: வேலூரில் உள்ள பிரபல ஊரிசு கல்லூரி விடுதியில் மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற விடுதிக் காப்பாளர் கைது செய்யப்பட்டார்.
வேலூரில் உள்ள ஊரிசு கல்லூரியில் பயிலும் மாணவி ஜீவா, இக் கல்லூரியின் பேராசிரியரும் விடுதிக் காப்பாளருமான பாண்டியன் என்பவர் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
அதில், நான் இரண்டாம் ஆண்டு பி.காம் படிக்கிறேன். ஆகஸ்ட் 29ம் தேதி விடுதி அறையில் நான் தனியாக இருந்தபோது, அங்கு வந்த விடுதிக் காப்பாளர் பாண்டியன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார்.
நான் கூக்குரலிட்டதும் பாண்டியன் தப்பிப் போய் விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் அவர்கள் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இத் தகவல் மாணவர்கள் மத்தியில் பரவியது. இதனால் ஆவேசம் அடைந்த மாணவர்கள் விடுதி காப்பாளர் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் கண்ணாடிகள், மின் விளக்குகள் உடைக்கப்பட்டன. கதவுகளும் உடைத்து நொறுக்கப்பட்டன.
தகவல் அறிந்த போலீசார் கல்லூரிக்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பெண்கள் விடுதியில் ஆண் காப்பாளர் நியமிக்கப்பட்டிருப்பது தவறு. எனவே, தவறு செய்த ஆண் காப்பாளர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, வேலூர் ஆர்.டி.ஓ. பொன்னுசாமி, தாசில்தார் ராஜ்குமார், வேலூர் மண்டல கல்லூரிகள் கல்வி இணை இயக்குனர் சுப்பிரமணியம் ஆகியோர், மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து, வேலூர் அனைத்து மகளிர் போலீசில் மாணவி ஜீவா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சூரியகலா, இது குறித்து வழக்கு பதிவு செய்தார். பின்னர் பேராசிரியர் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
மேலும், மாணவர்களிடையே கொந்தளிப்பு நிலவுவதால், கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட பாண்டியன் மீது, ஏற்கனவே இதுபோன்று பல பாலியல் புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும், கல்லூரி நிர்வாகம் இவருக்கு உடந்தையாக இருப்பதாகவும் கல்லூரி பேராசிரியர்கள் சிலரே தெரிவிக்கின்றனர்.
கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால், போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications