அடுத்த வாரம் தமிழகம் வருகிறார் ராகுல் -2 நாள் சுற்றுப்பயணம்

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொது செயலாளர் ராகுல் காந்தி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஐந்து மாநிலங்களில் இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் நடத்த தீவிர ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸார்கள், கட்சி உறுப்பினர் சேர்க்கையை கடந்த 14ம் தேதி முதல் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அதே போல் தமிழகத்திலும் கட்சியை வலுப்படுத்த ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். எப்போது, எங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் போன்றவை தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் பட்டியல் தரும்படி கேட்டுள்ளார்.
இதையடுத்து தங்கபாலு பிரத்யோக பட்டியலை தயாரித்து நேற்று முன்தினம் இரவு டெல்லிக்கு விமானம் ஏறினார். நேற்று அவர் ராகுல் காந்தியிடம் அந்த பட்டியலை ஒப்படைத்தார்.
அதில் ராகுல் காந்தி லேசான மாற்றங்கள் செய்துள்ளதாகவும், அவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அடுத்த வாரம் தமிழகம் வருவார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தங்கபாலு கூறுகையில், ராகுல் காந்தி எப்போது வருகிறார் என்ற சரியான தேதி மற்றும் அவரது பயணத் திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இருப்பினும், சென்னை வரும் ராகுல் காந்தி, கட்சித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் புதுப்பித்து கட்டப்பட்டிருக்கும் தியாகிகள் அரங்கை திறந்து வைக்கவிருப்பதாகவும், பின்னர் அவர் தமிழகத்தில் உள்ள சில கிராமங்களுக்கு சென்று பொது மக்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் தமிழக பயணத்தின்போது நடிகர் விஜய் காங்கிரஸில் சேருவது குறித்து இறுதி செய்யப்படுமா என்பது குறித்துத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications