தடம் மாறிப் போய் மலையில் மோதிய ஹெலிகாப்டர்
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் தனது பாதையிலிருந்து கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் தூரத்திற்குப் பாதை மீறிப் போய் மலையில் மோதியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத்திலிருந்து கிளம்பிய அந்த ஹெலிகாப்டர் கிழக்கு நோக்கி சித்தூர் சென்று கொண்டிருந்தபோது கர்னூலிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவுக்கு தடம் மாறி நல்லமலா காட்டுப் பகுதியில் பயணித்துள்ளது. ருத்ரகொடுரு என்ற இடத்தில் தான் அது தடம் மாறியுள்ளது.
தடம் மாறி பயணித்த ஹெலிகாப்டர் திடீரென குறுக்கிட்ட மலையில் மோதி உடைந்து நொறுங்கியுள்ளது.
இதுகுறித்து ஆந்திர நிதியமைச்சர் ரோசய்யா கூறுகையில், மலையில் ஹெலிகாப்டர் மோதியவுடன் வெடித்துச் சிதறியுள்ளது. அதில் பயணம் செய்த ஐந்து பேரும் உடல் கருகி இறந்துள்ளனர் என்றார்.
மோசமான வானிலையால் கரு மேகங்கள் சூழ்ந்ததால், ஹெலிகாப்டர் தடம் மாறிப் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் வால் பகுதி மட்டுமே முழுமையாக உள்ளது. மற்ற பாகங்கள் அனைத்தும் துண்டு துண்டாக சிதறிப் போய் விட்டன.