ரெட்டி அகால மரணம்- ஹைதராபாத் விரைகிறார் சோனியா
டெல்லி: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் திடீர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஹைதராபாத் விரைகிறார்.
நேற்று காலை ஹைதராபாத்திலிருந்து சித்தூர் கிளம்பிய ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர், கர்னூலோடு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
நேற்று முழுவதும் ஹெலிகாப்டர் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை கர்னூலிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் மலைக் குன்று ஒன்றின் மீது விழுந்து நொறுங்கி, எரிந்த நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அதில் பயணம் செய்த ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரும் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது.
பிரதமர் அவசர ஆலோசனை...
இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது.
அதேபோல உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
ஹைதராபாத் விரைகிறார் சோனியா...
ரெட்டியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஹைதராபாத் விரைகிறார்.
ஹெலிகாப்டர் காணாமல் போனது முதலே அவர் ரெட்டியின் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி வந்தார்.
இந்த நிலையில் ரெட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து சோனியா ஹைதராபாத் விரைகிறார்.
பெரும் சோகத்தில் ஆந்திரா...
முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது ஆந்திர மக்களை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கடித்துள்ளது.
குறிப்பாக காங்கிரஸார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரெட்டியின் வீட்டில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குழுமியுள்ளனர். பெருமளவிலான பெண்களும் கதறி அழுதபடி காணப்படுகின்றனர்.