விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தாக்குதல்-வி.எச்.பி. கண்டனம்
சென்னை: ஊட்டி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
நெடுஞ்சாலை வழியாக சமய ஊர்வலம் நடத்த இந்துக்களுக்கு உரிமை உள்ளது என்பதை நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 23ம் தேதி விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் அது விசர்ஜனம் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் விசர்ஜன பூஜைக்கு அங்கிருந்த முஸ்லிம் அன்பர்கள் திரண்டு வந்து பள்ளிவாசல் முன்பாக உற்சாகமாக வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.
ஊர்வலம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்தனர். இது சமுதாய நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும் செயலாகும். அவர்களுக்கும், அப்பகுதி காவல் துறையினருக்கும் எங்களது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.
ஆனால், ஊட்டி, திருப்பூர், திட்டுவிளை, திருவிதாங்கோடு ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் விநாயகர் சிலை விசர்ஜன விழாவின் போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திண்டுக்கல்லில் விழா முஸ்லிம் அன்பர்களின் சிறப்பான ஒத்துழைப்புடன் நடந்தது என்றால் ஏன் மற்ற ஊர்களில் நடத்த முடியாது. அவ்வாறே மற்ற ஊரிலும் செல்ல முடியும். செல்ல வேண்டும்.
இந்து மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் முஸ்லிம்களோ, அரசு அதிகாரிகளோ செயல்பட கூடாது. அவர்கள் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் செயல்பட வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் சார்பாக வலியுறுத்துகிறேன் என்றார் வேதாந்தம்.