கருணாநிதிக்கு பாரதரத்னா வழங்க வேண்டும்- திமுக மகளிர் அணி
சென்னை: மனித வாழ்வுக்கு சிறப்பு சேர்க்க தொடர்ந்து கடமையாற்றும் முதல்வர் கருணாநிதிக்கு மத்திய அரசு உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்திட வேண்டும் என திமுக மகளிர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.
தி.மு.க. மாநில மகளிர் அணி-மகளிர் தொண்டர் அணி-மகளிர் பிரசாரக்குழு நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் மாநில மகளிர் அணி தலைவர் எம்.ஏ.நூர்ஜகான்பேகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குண பாண்டியன், மாநில மகளிர் அணி புரவலர் புலவர் இந்திரகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி செயலாளர் புதுக்கோட்டை விஜயா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நிறைவேற்றப்படாத கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம், உயிர்காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்பட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி பசிப்பிணி போக்கி, நோய்ப்பிணி நீக்கி மனித வாழ்வுக்கு சிறப்பு சேர்க்க தொடர்ந்து இலக்கிய கடமையாற்றும் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு மத்திய அரசு உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்திட மத்திய அரசை தி.மு.க.மகளிர் அணி கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
அண்ணா நூற்றாண்டு நிறைவையொட்டி, முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கி சிறப்பிக்கும் தி.மு.க. தலைமை கழகத்துக்கு மகளிர் அணி தனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி சாந்தா ஸ்டாலின் ஆகியோர் தானே முன்னுதாரணமாய் இருந்து உடல் உறுப்பு தானம் செய்யும் படிவத்தில் கையொப்பமிட்டமைக்கு தி.மு.க. மகளிர் அணி கூட்டம் இதயபூர்வமான பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறது.
அண்ணா நூற்றாண்டு நிறைவையொட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கிலும், காஞ்சீபுரத்திலும் நடைபெறும் தி.மு.க.முப்பெரும் விழாவிலும் தி.மு.க.மகளிர் அணியினர் தமிழகம் முழுவதிலும் இருந்து பெருந்திரளாக வந்து கலந்துகொள்வது என தி.மு.க.மகளிர் அணி கூட்டம் தீர்மானிக்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.