பாக். அமைச்சர் மீது துப்பாக்கி சூடு-காயத்துடன் உயிர் தப்பினார்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மத விவகார துறை அமைச்சர் ஹமித் சையத் கஷ்மி மீது தீவிரவாதிகள் இன்று துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அமைச்சருக்கு காலில் குண்டு பாய்ந்தது. அவரது டிரைவர் பலியானார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு பாகிஸ்தான் மத விவகார துறை அமைச்சர் ஹமித் சையத் கஷ்மி இன்று காலை தனது காரில் அலுவலக்ததுக்கு சென்று கொண்டிருந்தார்.
அலுவலகத்துக்கு அருகில் அவரது கார் வந்த போது அந்த பக்கமாக பைக்கில் வந்த இரண்டு தீவிரவாதிகள், கஷ்மியின் காரை நோக்கி சராமரியாக சுட்டனர். பின்னர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடி விட்டனர். இதில் கஷ்மியின் கார் டிரைவரின் நெற்றியில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
கஷ்மியின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெரிய அளவில் காயம் இல்லை என்றாலும் அவர் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இஸ்லாமாபாத் போலீஸ் தலைமை அதிகாரி தாகிர் ஆலம் கூறுகையில்,
சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்து விசாரணையை துவக்கியுள்ளோம். இந்த சம்பவத்துக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால், இதற்கு தாலிபான் தான் காரணமாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.
தாக்குதலுக்கு ஆளா மத விவகாரத்துறை அமைச்சர் தாலிபான்களுக்கு எதிராக அடிக்கடி பேசி வருபவர். இதனால் அவரை கொல்ல தாலிபான்கள் முயற்சி செய்திருக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications