தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் - கருணாநிதி
சென்னை: 2 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் தொடக்கப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
100 மாணவர்கள் வரை பயிலும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இதுவரை இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். இதன் காரணமாக, சில பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம் 1:40 முதல் 1:50 வரை இருந்தது.
இது போன்று அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், செயல்வழிக்கற்றல் முறையை நடைமுறைப்படுத்துவதில் இருந்த பிரச்சினைகள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் எண்ணிக்கை 70க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதுவரை இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்த நிலையை மாற்றி, மூன்று ஆசிரியர்கள் பணிபுரிவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவின்படி, இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 70 மாணவர்களுக்கு மேல் பயிலும் 1400 பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்கள் என்பதற்குப் பதிலாக இனி மூன்று ஆசிரியர்கள் பணிபுரிவார்கள். இதன் மூலம் கற்பிக்கும் திறனும், மாணவர்கள் மீதான ஆசிரியர்கள் கவனமும் மேம்படும் என்று தெரிவித்துள்ளார்.