போலி ரேஷன் கார்டு - மறு ஆய்வு நடத்த அமைச்சர் உத்தரவு
விருதுநகர்: விருதுநகர் பகுதியில் போலி ரேஷன் கார்டு ஆய்வின் போது கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் மீண்டும் கார்டுகளை ஆய்வு செய்ய உணவுத்துறை அமைச்சர் எ.வ . வேலு உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டுகளைக் கண்டறிந்து நூறு சதவீத ரேஷன் கார்டு தணிக்கை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் ஆகியோர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பணிகளை உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு விருதுநகர் பகுதியில் உள்ள உசிலம்பட்டி, அல்லம்பட்டி, மீசலூர், மருளூத்து, இனாம் ரெட்டியபட்டியில் ஆய்வு மேற்கொண்ட போது, வீட்டு நம்பர்கள் மாறி மாறி இருந்தது. பல வீடுகளுக்கு பணியாளர்கள் ஆய்வு செய்ய செல்லவில்லை என்றும், சில வீடுகளில் வேறு தெருவில் இருப்பவர் முகவரி மாறியது குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை என்பதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் எ.வ.வேலு, டி.ஆர்.ஒவிடம் இந்த பகுதியில் மீண்டும் ரேஷன் கார்டுகளை சரி பார்க்க உத்தரவிட்டார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மாறி மாறி குரல் எழுப்பினர்.
இதையடுத்து மக்களை அமைதிப்படுத்திய அமைச்சர் அமைச்சர் வேலு, அப்பகுதி மக்களிடம் இந்த பகுதியில் மீண்டும் ஆய்வு நடத்த உத்தரவிடுவதாக வாக்குறுதி அளித்தார்.