எந்த மாதிரி உறவு வேண்டும்: பாக். முடிவு செய்யட்டும்-இந்தியா
டெல்லி: மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் போதாது என கூறி வரும் பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் எந்த மாதிரியான உறவு வைத்து கொள்ள விரும்புகிறது என்பதை தீர்மானிக்க வேண்டும் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கசாப்பிடம் தற்போது போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணயில் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை உடனுக்கு உடன் பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தெரிவித்து வருகிறது. மேலும், இந்த வழக்கில் ஜமாத் உத் தாவா தலைவர் சையத் ஹபீசை முக்கிய குற்றவாளியாக சேர்த்து பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் போலீஸ் அவரை கைது செய்தது. ஆனால், நீதிமன்றம் அவரை விடுவித்து விட்டது. இந்நிலையில் அவரை கைது செய்ய போதிய ஆதாரத்தை இந்திய வழங்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்நிலையி்ல் இது குறித்து இந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதையும், இதற்கான திட்டம் பாகிஸ்தான் மண்ணில் போடப்பட்டிருப்பதையும் அவர்கள் ஏற்கனவே ஒத்துக்கொண்டார்கள். இது தொடர்பான தகவல்கள் தற்போது அவர்களிடம் இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரையில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். கிடைக்கும் அனைத்து தகவல்களையும் அவர்களுக்கு உடனடியாக தெரிவித்து வருகிறோம்.
சையத் ஹபீசை கைது செய்ய போதுமான ஆதாரமில்லை என தற்போது பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் இந்தியாவுடன் எந்த மாதிரி உறவு வைத்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications