நெல்லை பாமக பிரமுகரை துப்பாக்கியால் சுட்டவர் கோவையில் கைது
நெல்லை: நெல்லை பாமக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நேற்று கோயம்புத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை செட்டிகுளத்தை சேர்ந்தவர் நிக்சன். இவர் பாமக மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். கடந்த மாதம் 3ம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டது.
இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கினர். இதை தொடர்ந்து எம்கேபி நகர் அசரியா, ஸ்டீபன், தென்கலம் இஸ்ரவேல், ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான பாளையங்கோட்டை செட்டிகுளத்தை சேர்ந்த ரவுடி பாட்ஷா என்ற ஆரோக்கியராஜ் மும்பை தப்பியோடிவிட்டார்.
மற்றொரு குற்றவாளி ராமசந்திரன் எங்கு போனார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையி்ல் கோயம்புத்தூரில் கொள்ளையில் ஈடுபட்ட ராமசந்திரனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஓப்படைத்தனர்.
இதையடுத்து கோயம்புத்தூர் போலீசார் இது குறித்து நெல்லை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவரை அழைத்து வர நெல்லை போலீசார் கோயம்புத்தூர் விரைந்துள்ளனர்.