அதிமுகவில் இணைந்தார் எம்.ஜி.ஆரின் அண்ணன் பேரன்
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் வழி பேரன் எம்.ஜி.சி.பி.பிரதீப் தன்னை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
திரும்பி வந்தவர்கள்...
சேலம் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. முன்னாள் செயலாளர் முன்னாள் எம்.பி. க.அர்ச்சுனன் தலைமையில், தே.மு.தி.க.வைச் சேர்ந்த சேலம் மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ்.பி.செந்தில்நாதன், இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.ஜெய்சங்கர், வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வி.வைரவேல், மேச்சேரி பேரூராட்சி செயலாளர் ஜி.மணிவண்ணன், தாரமங்கலம் ஒன்றிய அவைத் தலைவர் எ.செல்வகுமார் உள்ளிட்ட 10 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
சேலம் நாடாளுமன்ற தே.மு.தி.க. பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.இ.வெங்கடாசலம் தலைமையில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த மேச்சேரி ஒன்றிய அவைத் தலைவர் என்.வெங்கடாசலம், தாரமங்கலம் பேரூராட்சி செயலாளர் 3-வது வார்டு உறுப்பினர் ஆர்.சின்னசாமி, கருப்பூர் பேரூராட்சி அவைத் தலைவர் சி.வடிவேல், மேச்சேரி ஒன்றிய மாணவர் அணி செயலாளர் பி.ரவி, சூரமங்கலம் பிரதிநிதி எம்.ஆர்.முருகேசன், எடப்பாடி ஒன்றிய முன்னாள் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 10 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அவர்கள் அனைவரையும் ஜெயலலிதா வாழ்த்தி வரவேற்று, அவர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். தங்களை இணைத்துக் கொண்டதற்காக அவர்கள் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் வெங்கடாச்சலம், அர்ச்சுனன் ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி தேமுதிகவில் போய்ச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் தற்போது மறுபடியும் அவர்கள் அதிமுகவுக்குத் திரும்பி வந்துள்ளனர்.