ஆந்திர அமைச்சர்கள் இன்று மீண்டும் பதவியேற்பு
ஹைதராபாத்: ராஜசேகர ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் இன்று மாலை மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவுள்ளனர்.
இந்த மறு பதவிப்பிரமாணம் தொடர்பாக கடந்த 3 நாட்ளாக பெரும் குழப்பம் நிலவி வந்தது.
அரசியல் சாசனச் சட்டப்படி, ஒரு முதல்வர் பதவியேற்றால், அவருக்குக் கீழ் உள்ள அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும்.
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி திடீர் மரணமடைந்ததால், ரோசய்யா இடைக்கால முதல்வராகப் பதவியேற்றார்.
ஆனால் அமைச்சர்கள் யாரும் பதவிப்பிரமாணம் எடுக்கவில்லை. இதை ஆளுநர் என்.டி.திவாரியிடம் சட்ட நிபுணர்கள் எடுத்துரைத்தனர். இதையடுத்து அமைச்சர்கள் மீண்டும் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என ரோசய்யாவிடம் ஆளுநர் தெரிவித்தார்.
ஆனால் இதை ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவு அமைச்சர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ரோசய்யாவின் கீழ் பதவிப்பிரமாணம் எடுக்க முடியாது என்று அவர்கள் கூறினர். இதனால் குழப்பம் ஏற்பட்டது.
தற்போது அந்தக் குழப்பம் தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மறு பதவிப்பிரமாணம் எடுக்கவுள்ளனர்.
ராஜசேகர ரெட்டி அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ரெட்டி ஆதரவாளர்கள். எனவே இவர்களில் எத்தனை பேர் இன்றைய மறு பதவிப்பிரமாணத்தில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.