பெற்ற மகளை 10 வருடங்களாக கற்பழித்து வந்த நபர் கைது
புவனேஸ்வர்: ஒரிசாவைச் சேர்ந்த 58 வயது நபர் தனது மகளை பத்து வருடங்களாக கற்பழித்து சீரழித்து வந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த அக்கிரம நபரின் பெயர் பிஷ்ணுமோகன் பான்டா. பட்ரக் மாவட்டம், ராஜ்குருபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவரது 32 வயது மகள், சனிக்கிழமை கிராமத்தினர் சிலருடைய உதவியுடன் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், எனது தந்தை என்னை பத்து வருடங்களாக கற்பழித்து வந்தார். நான் 9வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது முதல் முறையாக அவர் என்னை பாலியல் ரீதியாக சீரழித்தார். அதன் பின்னர் என்னை மிரட்டி மிரட்டி தொடர்ந்து சீரழித்து வந்தார்.
இதை வெளியில் சொன்னால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என என்னை மிரட்டி வைத்திருந்தார். இந்த பத்து ஆண்டு காலத்தில் பலமுறை நான் கர்ப்பமானேன். அப்போதெல்லாம் என்னை ரகசியமாக கூட்டிச் சென்று கருக்கலைப்பு செய்து விடுவார்.
பின்னர் என்னை ஒரு ஏழைக்கு கல்யாணம் செய்து வைத்து, என்னையும், எனது கணவரையும் தன்னுடனேயே தங்க வைத்துக் கொள்ளவும், தொடர்ந்து என்னை தகாத உறவுக்கு உட்படுத்தவும் அவர் திட்டமிட்டார் என்று கூறியிருந்தார் அந்தப் பெண்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து பான்டாவைப் போலீஸார் கைது செய்தனர்.
தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.