பெண்கள் டிவிக்கு, இளைஞர்கள் மதுவுக்கு அடிமை-ராமதாஸ்
தருமபுரி: நாட்டில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். அதேபோல் பெண்கள் டிவிக்கு அடிமைகளாக உள்ளனர். இதனால் சமுதாயம் கெட்டுப் போய் விட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட பசுமை தாயகம் அமைப்பாளருமான இரா.தயாளன், யசோதா ஆகியோரின் திருமணம் தொப்பூரில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது ராமதாஸ் பேசுகையில்,
நாட்டில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். பெண்கள் டிவிக்கு அடிமையாக உள்ளனர். இதனால் தான் சமுதாயம் கெட்டுப் போய் விட்டது.
இளைஞர்கள் நாளுக்கு நாள் மதுவை தேடி அலைகிறார்கள். முன்பு, கிராம பகுதிகளில் 3 சதவீதம் பேர் மட்டுமே மது குடித்தனர். ஆனால் தற்போது 3 சதவீதம் பேர் மட்டுமே மது குடிக்காமல் இருக்கின்றனர்.
விழுப்புரத்துக்கும், தருமபுரிக்கும் போட்டி...
தற்போது விழுப்புரம் மாவட்டத்துக்கும், தருமபுரி மாவட்டத்துக்கும் ஒரு போட்டி ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் மது விற்பனை போட்டியாகும். இது ஆரோக்கியமான செயல் அல்ல. மது குடும்பத்தை மட்டும் அல்ல. நாட்டையே அழித்து விடும்.
இளைஞர்கள் சாதி, மத பேதமின்றி சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications