தகவல் அறியும் சட்டம் பயன்பாடு-தமிழகம் முதலிடம்
திருப்பூர்: தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் நாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மாநில தகவல் கமிஷனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் உரிமை சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட 20 மனுக்கள் குறித்து மாநில தகவல் கமிஷனர் பெருமாள்சாமி விசாரணை நடத்தினார்.
பின்பு, அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 2006 ஜனவரி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை தமிழகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 600 மனுக்கள் தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்டுள்ளன. இதில் 86 ஆயிரத்து 300 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அந்தந்த துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
22 ஆயிரத்து 500 மனுக்கள் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராதவை ஆகும்.
வெளிப்படையான அரசு நிர்வாகம், ஊழல் ஒழிப்பு, அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்வதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு இந்த சட்டம் உத்தரவாதம் தருகிறது. அரசு ரகசியங்கள் தொடர்பான சில துறைகளுக்கு, இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபரின் உயிர், உடல், உடைமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விளக்கங்கள், வியாபார ரீதியான ரகசியங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகம், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு, தமிழர்களிடையே உள்ள விழிப்புணர்வே காரணம்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேவையான தகவல் பெற, வெள்ளை பேப்பர் போதும். அதில், அத்துறையின் பொது தகவல் அதிகாரியின் முகவரியிட்டு, ரூ. 10 நீதிமன்ற முத்திரை ஒட்டி, அனுப்பினால் போதும்.
கருவூலத்தில் செலுத்தப்பட்ட சலான், டிடி ஆகியவற்றையும் கொடுக்கலாம். மேல்முறையீடு செய்ய, ஏற்கனவே செய்த மனுவின் ஜெராக்ஸ் இணைத்து விண்ணப்பிக்கலாம் என்றார்.