இத்தாலி-ஜார்ஜியாவில் நிலநடுக்கம்
சிசிலி & டிபிலிசி: ஜார்ஜியாவிலும் இத்தாலியிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜார்ஜியா தலைநகர் டிபிலிசியில் இருந்து சுமார் 156 கிமீ வடகிழக்கில் இருக்கும் மலை பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.2 அளவுக்கு பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை என ஜார்ஜியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷோடா உதியாஸ்விலி தெரிவித்துள்ளார்.
இந்த பூகம்பத்தை டிபிலிசி பகுதி மக்களும் உணர்ந்ததாகவும், அங்கிருந்த கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்து கொண்டு சாலைகளுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இத்தாலியில் 5.0 ரிக்டர்...
அதேபோல் இன்று அதிகாலை சுமார் 2.56 மணிக்கு இத்தாலியின் சிசிலி தீவின் தலைநகரான பாலேர்மோவுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்த நகரில் இருந்து 85 கிமீ வட கிழக்கில் மையம் கொண்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவி்லும்..:
இந்தோனேசியாவின் ஜாவா கடற்கரை பகுதியல் இன்று அதிகாலை 2.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது யாக்யாகார்டா நகருக்கு 167 கிமீ., தெற்கே மையமிட்டுள்ளது.
ரிக்டர் அளவில் சுமார் 6.1 ஆக பதிவானது. இதனால் சுனாமி வரும் வாய்ப்பு இல்லை என இந்தோனேசிய வானிலை மையத்தின் செய்தி தொடர்பாளர் ஜெயா முர்ஜயா தெரிவித்துள்ளார்.