விருதுநகர் அருகே லாரி, சுமோ மோதல்-8 பேர் பலி
விருதுநகர்: விருதுநகர் அருகே டாடா சுமோவும், கல் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் கருத்தபாண்டி(38). இவர் சமீபத்தில் இறந்த தனது தந்தை சுப்பையாவுக்கு திதி கொடுக்க சகோதரர்கள் கண்ணன், குருநாதன் மற்றும் குடும்பத்தினர் 14 பேருடன் ராமேஸ்வரம் சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து நேற்று சாத்தூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அருப்புகோட்டை தாண்டி வந்து கொண்டிருந்த போது அவர்கள் வந்த சுமோ, ஆலப்பட்டியில் இருந்து கல் ஏற்றிக்கொண்டு நரிக்குடி சென்று கொண்டிருந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது
இதில் சுமோவில் சென்ற சோலையம்மாள் (32), மல்லிகா (30), காந்தாரிமுத்து (28), மாரீஸ்வரன் (9), சக்திவேல் (12), ஓட்டுனர் தங்கம்(30) ஆகியோர் ஆறு பேரும் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி இறந்தனர்.
காயமைடந்தவர்கள் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கண்ணன் (42) என்பவர் உயிரிழந்தார். கங்கேஸ்வரன்(18) என்பவர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
மேலும், சிவசுப்பிரமணி (48), குணசேகரன் (12), கருத்தபாண்டி (38), லட்சுமி (42), காளீஸ்வரி (16), மாரீஸ்வரன் (16) ஆகிய 8 பேரும் திருச்சுழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் ரமேஷ் என்பவரை கைது செய்தனர்.