'காங்.கை கோட்டைக்கு கூட்டி செல்வார் ராகுல்'!
தஞ்சாவூர்: ராகுல் காந்தி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகள், நிச்சயம் தமிழக காங்கிரஸை புனித ஜார்ஜ் கோட்டைக்கு கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார் மயிலாடுதுறை லோக்சபா தேர்தலில் படு தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் மணிசங்கர அய்யர்.
ராகுல் காந்தியின் தமிழக பயணம் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. காங்கிரஸாரை சந்திக்க அவர் வந்தது போலத் தெரியவில்லை. மாறாக காங்கிரஸுக்கு ஆதரவாக மாறக் கூடிய தகுதி உடையவர்களை (Potential supporters) கண்டுபிடித்து அவர்களை காங்கிரஸ் பக்கம் திருப்பும் முயற்சியில்தான் அவர் முக்கிய கவனம் செலுத்துகிறார்.
ராகுல் செல்லும் இடமெல்லாம் இளைஞர் காங்கிரஸாரையும் சந்திக்கிறார் என்றாலும் கூட மற்ற பிரிவினரையும் குறிப்பாக மாணவர்கள், பெண்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என சகல தரப்பினரையும் அவர் சந்தித்து அவர்களை சுதந்திரமாக பேச விடுகிறார்.
காங்கிரஸ் கட்சி குறித்தும், ஒட்டுமொத்த அரசியல் குறித்தும் அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்கிறார். யாருக்கும் டக்கென அவர் வாக்குறுதிகளை கொடுத்து விடுவதில்லை. மாறாக, நீங்கள் முயற்சித்தால் மாற்ற முடியாதது எதுவும் இல்லை. காங்கிரஸுக்கு மாறுங்கள், நீங்களே நினைத்ததை செய்யுங்கள், மாற்றங்களைக் கொண்டு வாருங்கள் என்று அவர்களை படு நாசூக்காக காங்கிரஸ் பக்கம் திருப்பும் முயற்சியைச் செய்கிறார்.
இன்று காலை தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியின்போது விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த அவர், அவர்களை காங்கிரஸுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.
தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் விவசாயப் பிரிவு என்று இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எந்தக் கட்சியும் விவசாயிகளை இப்படி நேருக்கு நேர் அணுகி, குறிப்பாக முக்கியத் தலைவர்கள், பேசியதில்லை என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. இதனால் ராகுல் காந்தியின் பயணத்தால் டெல்டா மாவட்ட விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர் என்று நிச்சயமாக கூறலாம்.
இதற்கு ராகுல் காந்தியை சந்திக்க இன்று கூடிய விவசாயிகள் கூட்டமே சரியான உதாரணம். நிகழ்ச்சி நடந்த கந்த சரஸ் மஹாலுக்கு உள்ளே அழைத்து வரப்பட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர் என்றால் மஹாலுக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.
இருப்பினும் 35 வயதுக்குட்பட்டோர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம், இளம் விவசாயிகளாக இருந்தால் 45 வயது வரையில் இருந்தோரும் அனுமதிக்கப்பட்டனர்.
உள்ளே நுழைய அனுமதி கிடைக்காமல் வெளியில் காத்திருந்தவர்களில் ஒருவர் மணிசங்கர அய்யர். அவரிடம் பலரும் உள்ளே விட மறுக்கிறார்கள் என்று கூறியபோது அங்கு கூடியிருந்த பத்திரிக்கையார்களைப் பார்த்து அய்யர் கூறுகையில்,
என்னையே உள்ளே விட மறுத்து விட்டார்கள். எனக்கு 60 வயதைத் தாண்டி விட்டது. ஒரு விஷயத்தை மட்டும் நான் நிச்சயமாக கூற முடியும்.
இளைய தலைமுறையை விட்டால் காங்கிரஸுக்கு வேறு நம்பிக்கையே இனி இல்லை. பழைய தலைமுறையினர் தமிழகத்தில் கடந்த 42 ஆண்டுகளாக காங்கிரஸை உயர்த்தத் தவறி விட்டனர். அவர்கள் தோல்வி அடைந்து விட்டனர்.
தற்போது ராகுல் காந்தியும், இளைய தலைமுறையும் மேற்கொண்டுள்ள முயற்சிகள் நிச்சயம் காங்கிரஸ் கட்சியை புனித ஜார்ஜ் கோட்டைக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி என்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட குளித்தலை இம்ரான் கான், திருவாரூர் சத்யநாராயணா, பாபநாசம் ராதிகா ஆகியோர் வெளியில் இருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தி எங்களது நம்பிக்கைக்கு புத்துயிர் ஊட்டியுள்ளார். இளைஞர்களுக்கு காங்கிரஸில் முக்கிய இடம் தரப்படும் என்று உறுதியுடன் கூறியுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications