படுக்கை அறை அந்தரங்கத்தை நண்பரிடம் போனில் கூறினார் - ஐபிஎஸ் அதிகாரி மனைவி வாக்குமூலம்
போலீஸ் விசாரணையின்போது இதை அவர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் உதவி மேலாளராக இருப்பவர் சர்மிளா. இவரது கணவர் சாமுவேல். இவர் ஜம்மு காஷ்மீர் மாநில ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
சில தினங்களுக்கு முன்பு தனது கணவர் தன்னை கூடுதல் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்வதாக புகார் அளித்தார் சர்மிளா. இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீஸ் முன்பு ஆஜரான சாமுவேல், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு உள்ளது. அதை மறைக்க என் மீது அவதூறாகப் புகார் கூறுகிறார் என்று கூறினார்.
இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவுப்படி நேற்று சர்மிளா மற்றும் சாமுவேல் இருவரையும் கிரீம்ஸ் சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
மனைவியின் கள்ளத் தொடர்பு...
அப்போது உதவி ஆணையர் விமலாவிடம் சாமுவேல் அளித்த வாக்குமூலத்தில், திருமணத்திற்கு முன்பே மனைவியுடன் நெருக்கமாக பழகினேன். அதில், அவர் கர்ப்பமானார். திருமணத்திற்கு பிறகு, என்னிடம் சொல்லாமல் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டார். அதில் இருந்து தான் எங்களுக்குள் பிரச்னை ஆரம்பித்தது.
என்னிடம் இருந்து விலக ஆரம்பித்த சர்மிளா, வேறொரு வங்கியில் பணியாற்றிவரும் அதிகாரியுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளேன்.
நான், எனது மனைவியிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டேன். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற விஷயமும், எனது தலை வழுக்கை தலை என்பதும் எனது மனைவிக்கு ஏற்கனவே தெரியும்.
எனது மனைவி திருமணத்துக்கு முன்பே அவரோடு கல்லூரியில் படித்த வாலிபர் ஒருவரோடு காதல் வயப்பட்டுள்ளார். அந்த காதல் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்தது. குறிப்பிட்ட அந்த வாலிபர் எனது மனைவியை சந்திக்க காஷ்மீருக்கே வந்துவிட்டார். எனது மனைவியின் கள்ள காதலை கண்டித்ததால் என்மீது அபாண்டமாக குற்றம் சுமத்த ஆரம்பித்துவிட்டார்.
திருமணமான ஒரு மாதத்தில் அவர் கர்ப்பம் அடைந்தார். அந்த கர்ப்பம் திருமணத்துக்கு முன்பே உருவாகியுள்ளது. அந்த கருவை கலைத்துவிட்டு வரும்படி நான் பெருந்தன்மையாக கூறினேன். விஷயம் வெளியில் தெரிந்துவிட்டதால் எனது மனைவி ஆத்திரத்தோடு அபாண்டமாக பழி சுமத்தியுள்ளார்.
எனது மனைவியும், நானும் ஒருங்கிணைந்த விருப்பத்தோடு விவாகரத்து பெற முடிவு செய்தோம். விவாகரத்து தர தயார் என்று எனது மனைவியே செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் எனக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் நான் வழக்கு போட்டுள்ளேன். அந்த வழக்கை முறியடிப்பதற்காக வேண்டுமென்றே எனது மனைவி பொய்யான புகாரை கொடுத்துள்ளார். எனக்கும், எனது மனைவிக்கும் உள்ள பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் கோர்ட்டு எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்றார்.
கணவருக்குத்தான் கள்ளத் தொடர்பு...
பின்னர் சர்மிளா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,
எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு முன்பே தொடர்பு இருந்துள்ளது. அப்பெண் அவரை ஏமாற்றியுள்ளார். அதை மறைத்து என்னை திருமணம் செய்துள்ள விவரம் பிறகு தான் தெரியவந்தது.
எனது கணவர் ஒரு கபட வேடதாரி. தாழ்வு மனப்பான்மை கொண்டவர். அவருக்கு இருந்த வழுக்கை தலையால் இந்த தாழ்வு மனப்பான்மை இருந்தது. திருமணத்துக்கு முன்பு என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டார். வெளியில் பல இடங்களுக்கு அழைத்து சென்றார். சென்னை ஹிக்கின் பாதம்ஸ்' புத்தக கடைக்கு அழைத்து சென்று நான் விரும்பிய புத்தகத்தை எல்லாம் வாங்கி கொடுத்தார்.
என்னை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டும் என்று ஊக்கம் கொடுத்தார். நான் சைவம் என்பதால் அவர் சைவத்திற்கு மாறிவிட்டதாக கூறினார். ஆனால் அத்தனையும் வேஷம் என்பது திருமணத்துக்கு பின்புதான் தெரியும்.
அவருக்கு இருந்த வழுக்கை தலையை விக்' வைத்து மறைத்து ஏமாற்றியதை கூட நான் சகித்துக்கொண்டேன். ஆனால் அவர் என்னை மனைவியே இல்லை என்று தூக்கி எறிந்து பேசினார். அவர் கட்டிய மஞ்சள் கயிற்றால் ஆன தாலியை கழற்ற சொன்னார்.
ஏற்கனவே முதல் மனைவியை விவாகரத்து பெற்றிருந்தார். இப்போது என்னையும் விரட்டி விட்டு 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய பார்க்கிறார். இன்னும் ஒரு மாதத்தில் 3-வது திருமணம் செய்து காட்டுவேன் என்று எனது கணவர் என்னிடம் சவால் விட்டுள்ளார்.
ஏற்கனவே 2 பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ள அவர், 3-வதாக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் சீரழித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவரின் கபட நாடக வேஷத்தை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தினேன். ஒரு பொறுப்புள்ள போலீஸ் அதிகாரி மற்றவருக்கு பாடமாக இருக்க வேண்டியவர் பெண்களை எவ்வளவு இழிவாக நடத்துகிறார் என்பதை எடுத்துக்காட்டவே புகார் கொடுத்தேன். சட்டத்தின் முன்பு அவரை நிறுத்தியுள்ளேன்.
பெண்கள் என்றாலே சாமுவேலுக்கு பிடிக்காது. எங்கள் வாழ்க்கையில், கணவரின் நண்பர் சாம் கண்ணன் குறுக்கிடத் துவங்கினார். என்னுடன் படுக்கை அறையில் இருந்த சாமுவேல், நண்பரிடம் போனில், மனைவியுடன் எந்த நேரத்தில் நெருக்கமாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என கேட்டார்.
அதிர்ச்சியடைந்த நான், அதை அப்போது கண்டித்தேன். எனது பேச்சை கேட்காத சாமுவேல், எது செய்தாலும் நண்பரை கேட்டுத் தான் செய்வேன் என உறுதியாக கூறினார்.
அச்சம்பவத்தில் இருந்து அவரிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். எங்கள் குடும்பத்தினரை அவருக்கு பிடிக்கவில்லை. குடும்பத்தினரை இழிவாக பேச ஆரம்பித்தார். நானும் அவரது குடும்பத்தினரை இழிவாக பேசினேன். பிரச்னை பெரிதானது. அவரது நண்பர் மேலும் பெரிதாக்கி விட்டார்.
என்னுடைய காதலன் என்று எனது கணவர் இழிவாக பேசியவர் எனக்கு அண்ணன் முறை ஆவார். அவரும் சமீபத்தில் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவரை பற்றி எனது கணவருக்கு நன்றாக தெரியும். எனது கணவரின் கொடுமையில் இருந்து என்னை மீட்பதற்காகவே அவர் காஷ்மீர் வந்தார். இதை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.
திருமணத்துக்கு முன்பே நான் கர்ப்பமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அது மிகப்பெரிய அபாண்டம். திருமணம் நடந்த பிறகு கூட எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. அதற்கான மருத்துவ சான்றிதழ் என்னிடம் உள்ளது.
காஷ்மீரில் இருந்த போது, என்னை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தார். எனது நடத்தையை சந்தேகப்பட்டார். காஷ்மீரில் இருந்து சென்னை வந்தவுடன், வயிற்றில் வளர்ந்த குழந்தையை கலைத்துவிட்டேன்.
ஐ.பி.எஸ். என்ற அதிகார பலத்தில் எனது கணவர் தப்பிக்க பார்க்கிறார் என்று கூறியுள்ளார் சர்மிளா.
இந்த விவகாரம் குறித்து கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், சாமுவேல் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும் கூட முழு அளவில், நியாயமான விசாரணை நடத்தப்படும். சாமுவேல், சர்மிளாவை அடித்து துன்புறுத்தியிருந்தால் அது தவறு. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.