'ஜெட்' வேகத்தில் உயர்ந்த விமான கட்டணம்-5 மடங்கு அதிகரித்தது
ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் புக் செய்திருந்த சுமார் 35 ஆயிரம் தற்போது வேறு விமானத்தில் டிக்கெட் வாங்க முயற்சிப்பதால் மற்ற விமானங்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் டிக்கெட் விலையை நான்கு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளனர்.
இதன்காரணமாக வழக்கமாக சென்னையில் இருந்து மும்பைக்கு பறக்க தலை ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் மட்டும் வாங்கும் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் அதை நான்கு மடங்கிற்கு அதிகமாக ரூ. 17 ஆயிரமாக வசூல் செய்து வருகின்றன.
கிங் பிஷ்ஷர் நிறுவனம் இவர்களுக்கு ஒரு படி மேலே போயுள்ளது. டிக்கெட் விலையை 5 மடங்கு அதிகரித்து ரூ. 21 ஆயிரமாக நி்ர்ணயித்துள்ளது.
ஜெட் நிலைமை மோசமாகிறது...
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து 600 விமானிகள் ஒட்டுமொத்தமாக மாஸ் லீவ் போட்டு நிறுவனத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.
இதனால் நேற்று மட்டும் 194 உள்நாட்டு விமான சேவையும், 27 சர்வேதச விமான சேவையும் ரத்தானது. அதில் ஒன்றில் இந்திய வீரர்கள் கொழும்பு செல்வதாக இருந்தது. அவர்கள் பின்னர் ஏர் இந்தியா விமானம் மூலம் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையில் தினமும் 34 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் இயக்கப்படும். ஆனால், நேற்று 3 விமானங்கள் தான் இயக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நிர்வாகத்துக்கும், ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத சுமார் 14 ஆயிரம் வாடிக்கையாளர் கையில் டிக்கெட்டுடன் என்ன செய்வது என தெரியாமல் பல்வேறு விமான நிலையங்களில் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இந்நிலையில் மேலும் சில ஊழியர்கள் லீவு போட்டிருப்பது நிலைமை மோசமடைய செய்துள்ளது.
இது குறித்து மும்பையை சேர்ந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இன்று காலை சென்னையில் இருந்து பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு செல்லவிருந்த விமானம் ஒன்று விமானி இல்லாமல் ரத்தாகியுள்ளது.
பிரஸ்ஸல்ஸ் முக்கியமான இணைப்பு விமான நிலையம். பல நாடுகளில் இருந்து வரும் இந்தியர்களும், பயணிகளும் இங்கு வந்து தான் சென்னைக்கு விமானம் ஏறுகின்றனர்.
இங்கு செல்லும் சென்னை விமானம் ஒன்று ரத்து செய்யப்பட்டதால் அதன்மூலம் அங்கிருந்து திரும்பி வரவிருக்கும் ஆறு விமானங்களை சேர்ந்த பயணிகள் பாதிப்படைவார்கள்.
இவர்களுடன் தற்போது போராட்டத்தில் மேலும் சில ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஒருவர் பயணத்தின் போது வெளிநாட்டுக்கு போய்விட்டார். அவர் திரும்பி வந்த பின்னர் தான் அந்த விமானத்தை கிளப்ப முடியும். கைவசம் இருந்த விமானிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.
ஆனால், விமானிகள் சங்கத்தை சேர்ந்த ஒருவர் இதை மறுத்துள்ளார். பிரச்சனையின் நிலைமையை பெரிதாக்கி ஆதாயம் தேடும் நோக்கத்தில் நிர்வாகமே பல முக்கிய விமானங்களை நிறுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெட் நிர்வாகம் விமானிகள், என்ஜினியர்கள், அதிகாரிகள், மானேஜர்கள் என யாருக்கும் கடந்த மாத சம்பளம் கொடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மனித வள பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஒவ்வொரு மாதமும் கடைசி நாள் சம்பளம் போடுவது வழக்கம். ஆனால், ஆகஸ்ட் 31ம் தேதி அனைவருக்கும் செப்டம்பர் 7ம் தேதி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது விமானிகள் மாஸ் லீவ் போட்டுள்ளதால் நிர்வாகம் சம்பளத்தை 15ம் தேதி கொடுக்க முடிவு செய்துள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத என்ஜினியர்கள், மானேஜர்கள் ஆகியோருக்கும் இது பொருந்தும். இந்த நடவடிக்கை மூலம் விமானிகள் வழிக்கு வருவார்கள் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்றார்.