கேரளாவுக்கு படகில் வந்த 4 பேர் மாயம்-புலிகளா?
இலங்கையில் இருந்து நேற்று மாலை திருவனந்தபுரத்துக்கு அருகில் இருக்கும் விழிஞ்சம் துறைமுகம் பகுதிக்கு நான்கு பேர் படகில் வந்ததாக கேரள கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால், அங்கு யாரும் இல்லை. அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடிய போதும், அந்த 4 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் படகை கடலில் மூழ்கடித்து விட்டு வேறு எங்காவது மாயமாகி இருக்கலாம் என்றும், அவர்கள் விடுதலை புலிகளாக இருக்கலாம் என்றும் சந்தேகமடைந்துள்ளனர். மேலும், கேரளாவின் அனைத்து கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
மேலும், போலீஸார் அருகில் உள்ள கோவாளம், சங்குமுகம், கொச்சி உள்ளிட்ட துறைமுக பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள போலீஸாருக்கும் சுங்கதுறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர்களும் தேடு்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அவர்கள் 4 பேரும் யார், எங்கு சென்றார்கள் போன்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள், கேரளாவில் இருக்கும் தமிழர்கள் யாருடனாவது தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தலைமறைவாக இருக்கிறார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.