கிச்சடியால் வீதிக்கு வந்து மாணவர்கள் போராட்டம்
ஈரோடு: ஈரோடு அருகே அரசு விடுதியில் ரவா கிச்சடி சரியாக வேகவில்லை என கூறி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ஈரோடு கலைக்கல்லூரி, வாசவி கல்லூரி, சிஎன் கல்லூரி உள்ளிட்டவற்றில் படிக்கும் சுமார் 165 மாணவர்கள் ரங்கம்பாளையம் அம்பேத்கர் அரசு மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் ரவா கிச்சடி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த வாரமும் வழங்கப்பட்டது. அப்போது சில மாணவர்கள் ரவா கிச்சடி சரியாக வேகவில்லை என குறை கூறினர்.
அவர்களில் சிலர் ஆவேசத்தின் உச்சத்துக்கு சென்றனர். சமையலறையில் கிண்டி வைத்திருந்த ரவா கிச்சடி மற்றும் சட்னி ஆகியவற்றை பாத்திரத்துடன் தூக்கி சென்றனர்.
அதை ஈரோடு-சென்னிமலை சாலையில் வீசினர். அதை தொட்ரந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு உங்கள் புகார்களை மாவட்ட கலெக்டரிடம் கொண்டு செல்லுங்கள் இங்கு மறியல் செய்யகூடாது என கூறினர்.
இதற்கிடையே தகவல் அறிந்த ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் மாரிமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.