ஊனமுற்ற மாணவருக்கு ரூ. 48,000 வழங்கிய ஸ்டெர்லைட்
தூத்துக்குடி: ஊனமுற்ற கல்லூரி மாணவர் ஒருவருக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் கல்வி உதவி தொகையாக ரூ. 48 ஆயிரத்து 865 வழங்கியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு இலவச பாட புத்தகங்கள், மற்றும் சீருடைகளை வழங்கி வருகிறது.
மேலும், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மேற்படிப்பிற்காக கல்வி ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பொறியியல் தகவல் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த ராமராஜ் என்ற ஊனமுற்ற மாணவர் தனக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிறுவனத்தி்ன் நிர்வாகத்துக்கு மனு அளித்தார்.
அதனை ஏற்று கொண்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன செயல்பாடுகள் பிரிவு துணைத் தலைவர் பிரசாத் சூர்ய ராவ் அந்த மாணவருக்கு ரூ.48,865 வழங்கினார்.
மேலும், இந்த மாணவனுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கான கல்வித் தொகையை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்க முன் வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மனிதவள பொது மேலாளர் ஜோசப் பீரீஸ், சமுதாய வளர்ச்சிப் பிரிவு தலைவர் ராஜசேகர பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.