நித்தாரி கொடூரக் கொலை - தொழிலதிபர் விடுதலை
பந்தர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று கோர்ட் தெரிவித்துள்ளது.
அதேசமயம், அவருடைய உதவியாளரான சுரீந்தர் கோலிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரிம்பாவின் குடும்பத்தினர் பெரும் வேதனை வெளியிட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தாரியில் உள்ள பந்தருக்குச் சொந்தமான பங்களாவிலிருந்து 14 வயது சிறுமி ரிம்பா உள்ளிட்ட 19 சிறார்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரது பங்களாவுக்கு உள்ளேயும், வெளியே உள்ள சாக்கடையிலும் எலும்புக் கூடுகள் குவியல் குவியலாக எடுக்கப்பட்டன.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக 55 வயதான பந்தரும், 38 வயதான அவருடைய உதவியாளர் கோலியும் கைது தசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பந்தர் மற்றும் கோலிக்கு தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் இருவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படுவதாக நீதிபித ரமா ஜெயின் அறிவித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பந்தர், கோலி சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அதில்தான் பந்தரை விடுவிப்பதாகவும், கோலியின் தண்டனையை உறுதி செய்வதாகவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பந்தர் மீது மொத்தம் 18 வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றில் சிலவற்றிலிருந்து கீழ் கோர்ட்டிலேயே பந்தர் விடுதலையாகி விட்டார். தண்டனை விதிக்கப்பட்ட இந்த முக்கிய வழக்கிலும் அவர் விடுதலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.