குலாம் நபி ஆசாத், சி.பி.ஜோஷியின் செயல்பாடுகள் - பிரதமர் கடும் அதிருப்தி

தத்தமது துறைகளில் உள்ள முக்கிய திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்றும் 30 நாட்களுக்குள் இதுதொடர்பாக தனக்கு அறிக்கை தர வேண்டும் எனவும் இரு அமைச்சர்களுக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் ஆசாத்தின் செயல்பாடுகள் ஆரம்பத்திலிருந்தே அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அவரது அமைச்சரவையின் செயல்பாடுகள் மிகவும் மந்த கதியில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
பன்றிக் காய்ச்சல் விவகாரத்தில் ஆரம்பத்தில் குலாம் நபி ஆசாத் செய்த குழப்பங்கள் நாடறிந்தது. பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க விறுவிறுப்பான நடவடிக்கை, திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை ஆரம்பத்தில் தீட்டவில்லை.
மேலும், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டிய ஆசாத், அவர்களை திட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ஆசாத்தின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ள பிரதமர் அவரை அழைத்து உங்களது செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கிறது. சுறுசுறுப்பாக செயல்பட முயற்சியுங்கள் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.
அதேபோல ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சி.பி.ஜோஷிக்கும், பிரதமரிடமிருந்து டோஸ் கிடைத்துள்ளது.
ஆசாத்தை அழைத்துப் பேசிய பிரதமர், சுகாதாரத் துறையின் முக்கிய பிரிவுகள் புறக்கணிப்பட்ட நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டினார். மேலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நவீனப்படுத்தல் பணியை முடுக்கி விடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஊரக சுகாதார மேம்பாட்டுக்கு முக்கிய கவனம் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் அரசுக்கு பெரும் பெயர் ஈட்டித் தந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை மேலும் பல மாநிலங்களில் விரிவுபடுத்தி அதை சிறப்பாக செய்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு ஜோஷியிடம் கூறியுள்ளார் பிரதமர்.
தான் சொன்ன வேலைகள் குறித்து 30 நாட்களுக்குள் அறிக்கை தருமாறும் இரு அமைச்சர்களுக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications