வெற்றி..வெற்றி..வெற்றி-தங்கபாலு 'உணர்ச்சிவசம்'
சென்னை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் தமிழக பயணம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
இதுதொடர்பாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
இளைய சமுதாயத்தின் இணையற்ற தலைவர், அனைவர் நெஞ்சங்களையும் ஈர்க்கும் அருமைத் தலைவர் ராகுலின் கடந்த மூன்று நாள் சூறாவளி சுற்றுப்பயணம் தமிழகத்தில் பேரெழுச்சியை உருவாக்கிய வரலாற்று நிகழ்ச்சியாகும்.
ராகுலின் சுற்றுப்பயணத்தில் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், அனைத்து தரப்பான தொழிலாளர்கள் உட்பட குறிப்பாக பெண்கள் ஆகிய தமிழ் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரையும் தனித்தனியாகவும், குழுக்களாகவும் சந்தித்து அவர்களது நிலைமைகளை அறிந்ததோடு, அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்கு வழிகாணும் தனது விருப்பத்தையும் அவர் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சிகளை நாம் நேரில் பார்த்தோம்.
கல்லூரி மாணவர்கள் முதல் பள்ளிக்கூடம் பயிலும் சிறுவர் சிறுமியர் வரை அவர்களோடு கலந்துரையாடி மகிழ்ந்தது சிறப்புமிகு நிகழ்ச்சிகளாகும். அனைத்திற்கும் மேலாக இளைஞர் காங்கிரசில் இணைந்துள்ள இளைஞர்கள் மத்தியில் அவர் கலந்துரையாடியதும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தனி அமைப்பும், தனி வாய்ப்பும் கொண்டு சுதந்திரமாக தங்களது நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறையிலான தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிற நிலையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றது இளைஞர்கள் மத்தியில் புதிய பண்பாட்டினை உருவாக்கும் நிகழ்ச்சியாகும்.
தமிழகத்தில் காங்கிரஸ் மேலும் வலிமை பெற்று சோனியாவின் தலைமைக்கு அணி சேர்க்கும் வண்ணம் முதல் இயக்கமாக மாற வேண்டும் என்ற விருப்பத்தையும், மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தையும் கோவை பொதுக்கூட்டத்தில் அவர் அறிவித்த கருத்து மிகச்சிறந்த எழுச்சியை உருவாக்கியுள்ளது.
தமிழ் மக்கள் நலன் கருதி இளைஞர்களோடும், மக்களோடும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு நல்லிணக்கத்தை உருவாக்கிட ராகுல் எடுக்கும் அரும்பெரும் முயற்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் வழிநெடுக மகிழ்ச்சி பொங்க ராகுலை வரவேற்று வாழ்த்திட்ட நிகழ்ச்சி என் கண்களை விட்டு அகலாதவை.
இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, சோனியா ஆகியோர் மீது எந்த அளவிற்கு பாசத்தை பொழிந்தார்களோ அதைவிடவும் கூடுதலான நேசத்தோடு ராகுலுக்கு வரவேற்பு வழங்கிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என்று கூறியுள்ளார் தங்கபாலு.