உசிலம்பட்டி அருகே கலவரம்- கல்வீச்சு - பஸ்கள் உடைப்பு
உசிலம்பட்டி: தலித் தலைவர் இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் அனுஷ்டிப்பு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் உசிலம்பட்டி அருகே பெரும் கலவரம் மூண்டது. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
1957ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் தலித் தலைவர் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நாளை தேவேந்திர குல வேளாளர் அமைப்பு ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக அனுஷ்டிக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பது தொடர்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல் மூண்டது.
இரு பிரிவினரும் சாலையில் திரண்டு பயங்கரமாக மோதிக் கொண்டனர். பஸ்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை கல்வீசித் தாக்கினர். இதில் 15 வாகனங்கள் சேதமடைந்தன. பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பஸ் போக்குவரத்து போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.