கண்ணிவெடிகளை அகற்ற இலங்கைக்கு யுஎஸ் உதவி!
கொழும்பு: வடக்கு இலங்கையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்ற இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கிறது அமெரிக்க ராணுவம்.
இலங்கையில் வன்னிப் பெருநிலப்பரப்பு உள்ளிட்ட வடகிழக்கு மாகாணம் முழுமையாக விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் பல ஆண்டுகள் இருந்தது. இந்தப் பகுதிக்குள் ராணுவம் நுழைந்துவிடக் கூடாது என்பதால் விடுதலைப்புலிகள் ஏராளமான கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்திருந்தனர். ஆனால் மக்கள் நடமாட்டமில்லாத எல்லைப் பகுதிகளில் இவற்றைப் புதைத்திருந்தனர் புலிகள்.
தற்போது, போர் முடிவுக்கு வந்து விட்ட நிலையில் இப்பகுதி ராணுவத்தின் பிடிக்குள் வந்துவிட்டது. மக்கள் அனைவரும் இப்பகுதிகளிலுருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, அங்கு புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கண்ணி வெடிகளை அகற்றுவது தொடர்பான பயிற்சிகளை இலங்கை ராணுவத்துக்கு அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கடற்படை வழங்கி வருகிறது. அத்துடன் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான சாதனங்களையும் இந்தப் படை வழங்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் அம்பிலிப்பட்டியலில் உள்ள இலங்கை ராணுவ என்ஜினீயரிங் பள்ளியில் வைத்து இதற்கான பயிற்சிகளை அளித்து வருகின்றனராம்.
இதன் மூலம், வடக்கில் கண்ணி வெடிகளை அகற்றும் இலங்கை ராணுவத்தினரின் செயல்திறன் மேம்படும் என்றும், வன்னி பகுதியில் மக்களை பாதுகாப்பாக மீண்டும் குடியமர்த்தும் அரசின் திட்டத்துக்கு இது உதவியாக இருக்கும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களில் 80 சதவிகிதத்தினர் விடுவிக்கப்பட்டு அவரவர் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள் என இலங்கை அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.