'போலி' மின்வாரிய அதிகாரி!-பயங்கர மோசடி!!
சென்னை: மின்வாரிய அதிகாரி என்று கூறிக் கொண்டு ஓய்வு பெற்ற என்ஜினியரிடம் ரூ. 39,000, 2 பவுன் மோதிரத்தை லவட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மைலாப்பூர் ரங்காச்சாரி தெருவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற என்ஜினீயர் ராமகிருஷ்ணன் (65). இவரது வீட்டுக்கு வந்த ஒரு வாலிபர் தன்னை மின்வாரிய அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
மின்வாரியத்திற்கு கூடுதலாக கட்டணம் கட்டியிருப்பவர்களை பட்டியல் எடுத்து வருவதாகவும் அவர்களுக்கு அந்த கூடுதல் கட்டணப் பணம் திருப்பி கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அந்த வகையில் நீங்கள் ரூ.3 லட்சம் அதிகமாக மின் கட்டணம் செலுத்தியுள்ளீர்கள். அந்த பணத்தை உங்களுக்கு திருப்பி தர சேவைக் கட்டணமாக முதலில் நீங்கள் கொஞ்சம் பணம் கட்ட வேண்டும் என்றார்.
பணத்தை தயார் செய்து வையுங்கள், நான் பின்னர் வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
அவர் சென்ற ஒரு மணி நேரத்தில் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம்.
உங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் அதிகாரியிடம் ரூ.40,000 பணத்தை கொடுத்து விடுங்கள் உங்களுக்கு ரூ.3 லட்சம் பணம் கிடைக்கும் என்றார்.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து அந்த நபர் வந்தார். அவரையும் தொலைபேசி அழைப்பையும் நம்பிய ராமகிருஷ்ணன் அந்த நபரிடம் ரூ.39,000 பணம் கொடுத்துள்ளார். இது பத்தாது என்று கூறி ராமகிருஷ்ணன் கையில் இருந்த 2 பவுன் மோதிரத்தையும் அந்த நபர் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.
ஆனால், ரூ. 3 லட்சம் திரும்ப வராததால் ராமகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்குச் சென்று நடந்த விவரங்களைக் கூறி பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மின் வாரிய ஊழியர்கள், நடந்தது மிகப் பெரிய மோடி.. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுங்கள் என்று அவரை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ராமகிருஷ்ணன் மைலாப்பூர் உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜிடம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications