மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர்
சென்னை: மனைவியை எரித்துக் கொலை செய்துவிட்டு, அதை சமையல் செய்யும்போது ஏற்பட்ட கேஸ் விபத்து மரணம் போல நாடகமாடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மணலியில் போக்குவரத்துப் பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் துரைமுருகன் (37). இவர் தனது மனைவி புவனேஸ்வரி (32), மகள்கள் பிரியங்கா (7), மித்ரா (6) ஆகியோருடன் கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
திருத்தணி அருகே கிராமத்தில் வசித்து வரும் புவனேஸ்வரியின் தாயார் தேசம்மாள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க புவனேஸ்வரி விரும்பினார்.
இதற்கு துரைமுருகன் எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து நேற்று இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அனைவரும் தூங்கிவிட்டனர். இந் நிலையில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த புவனேஸ்வரியின் தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி அடித்துள்ளார் துரைமுருகன். இதில் அவர் மயங்கி விழுந்தவுடன் அவரை சமையல் அறைக்குள் இழுத்துச் சென்று பெட்ரோலை ஊற்றி உடலுக்குத் தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகி புவனேஸ்வரி இறந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் பால் காய்ச்சும்போது கேஸ் கசிந்து தீவிபத்து ஏற்பட்டு மனைவி இறந்துவிட்டதாக நாடகமாடினார்.
ஆனால், அதை நம்பாத அக்கம் பக்கத்து வீட்டு போலீஸ் குடும்பங்கள் உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் தந்தனர்.
கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துரைமுருகனை கைது செய்தனர்.
இது கேஸ் விபத்து போல தெரிய வேண்டும் என்பதற்காக சிலிண்டரின் டியூபை அறுத்துள்ளார் துரைமுருகன். மேலும் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து வந்து புவனேஸ்வரி மீது ஊற்றி தீ வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications