வேளாண்மை மன்ற சட்டம்: அடுத்த சட்டசபை கூட்டத்தில் வாபஸ் வேண்டும்-ஜெயலலிதா
இது தொடர்பாக கொடநாட்டில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச்சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க் கட்சிகளின் சார்பிலோ, தோழமைக் கட்சிகளின் சார்பிலோ யாரும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட போதிலும், விவசாயப் பெருங்குடி மக்களின் எண்ணங்களுக்கும், பத்திரிகையாளர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்திடும் வகையில் மேற்படி சட்டம் அறிவிக்கை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச்சட்ட முன்வடிவு 21.7.2009 அன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக மேற்படி சட்டத்தை சுற்றுக்கு அனுப்ப வேண்டும் என்ற திருத்தம் அதிமுகவைச் சேர்ந்த சேலம்-1 தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரனால் முன் மொழியப்பட்டு, கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரால் வழி மொழியப்பட்டது.
மேற்படி சட்ட முன்வடிவின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வேலுசாமி “வேளாண் தொழிலை முறைப்படுத்துவதற்காகவும், அதில் ஈடுபடுபவர்களின் பெயர்களைப்பதிவு செய்வதற்காகவும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வருவது தேவையற்றதாகும். வேறு எங்குமே இல்லாத ஒரு சட்டத்தை இங்கே கொண்டு வருவதால் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே, இந்த சட்ட முன் வடிவு தேவையற்றது என்று கூறி, இதனைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் முன்மொழிந்த திருத்தம் தோல்வியுற்றதாக பேரவைத்தலைவர் அறிவித்து இருக்கிறார்.
இவற்றை 21.7.2009 நாளைய சட்டமன்ற நடவடிக்கைகள் குறிப்புகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
21.7.2009 அன்று மூன்று மணி நேரத்தில் 30 சட்ட முன்வடிவுகள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. சராசரியாக ஒரு சட்ட முன்வடிவிற்கு 6 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், மேற்படி சட்ட முன்வடிவை எதிர்த்து அதிமுக சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையெல்லாம் முழுவதுமாக மறைத்துவிட்டு, மேற்படி சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளைப் பார்க்காமல் இது போன்ற அறிவிப்பை வெளியிடுகிறாரா என்று தெரியவில்லை.
தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டத்தை அறிவிக்கை செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளதன் மூலம், அதிமுக கோரிக்கை ஏற்கப்பட்டு, பாரம்பரிய விவசாய முறை தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.
எனினும், பாரம்பரிய விவசாய முறையை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், மேற்படி சட்டத்தை திரும்பப்பெறும் சட்ட முன்வடிவை அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளின் சார்பில் திமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.