இது தான் குஜராத் போலீசின் லட்சணம்-ப.சிதம்பரம்
வாஷிங்டன்: போலி என்கெளண்டரில் இஸ்ரத் ஜஹான் கொல்லப்பட்டதற்கு குஜராத் மாநில அரசுதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் போலீஸ் நிர்வாகம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் 2004ம் ஆண்டு நடைபெற்ற என்கெளண்டரில் அப்பாவிப் பெண்ணான இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது சகாக்கள் மூன்று பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆனால், மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் இந்த என்கெளண்டர் நடத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் குஜராத் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந் நிலையில் அமெரிக்காவில் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய ப.சிதம்பரம்,
மத்திய அரசின் புலனாய்வுத் தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மாநில அரசுகள் எதையுமே முடிவுகட்டிவிடக் கூடாது. அதுவே இறுதியான ஆதாரமாகவும் ஆகிவிடாது. மத்திய புலனாய்வு அமைப்பு தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் பகிர்ந்து கொள்ளும்.
அந்த வகையில்தான் குஜராத் மாநிலத்துக்கும் தகவல்கள் தரப்பட்டன. அதையே இறுதி முடிவாக எடுத்துக் கொண்டு அம்மாநில அரசு செயல்பட்டால் அது மிகவும் துரதிருஷ்டவசமானது.
மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஒருவரைக் கொலை செய்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?.
தனது மாநில போலீஸார் வரம்பு மீறி மேற்கொண்ட செயலை நியாயப்படுத்தும் வகையில் மத்திய அரசு மீது குஜராத் மாநில அரசு பழிசுமத்தியுள்ளது. இது மிகவும் மோசமான முன்னுதாரணம். குஜராத் மாநிலத்தில் போலீஸ் நிர்வாகம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் என்றார் சிதம்பரம்.
அமெரிக்காவின் நிதித்துறைச் செயலர் டிமோத்தி கெய்த்னருடனும் சிதம்பரம் பின்னர் ஆலோசனை நடத்தினார். தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் செல்வது குறித்தும், அதைத் தடுப்பது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications