பனையூர் கொலை-பிகார் கள்ளத்துப்பாக்கி கும்பல் கைது
சென்னை: பனையூரில் நடந்த கப்பல் கேப்டன்-மனைவி கொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையாளி சண்முகசுந்திரத்துக்கு கள்ளத் துப்பாக்கி சப்ளை செய்த கும்பலை சிபிசிஐடி போலீசார் பிகார் மாநிலத்தில் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.
சென்னை நீலாங்கரை அருகே பனையூரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் இளங்கோவன், அவரது மனைவி ரமணி ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இளங்கோவனின் மருமகள் வசந்தி, பேரக் குழந்தைகள் குண்டுக் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த செயலைகளை செய்துவிட்டு தப்ப முயன்ற கொலையாளி சண்முகசுந்தரத்தை பொது மக்கள் சுற்றி வளைத்துத் தாக்கிப் பிடித்து நீலாங்கரை போலீசிடம் ஒப்படைத்தனர். ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்தார் சண்முகசுந்தரம்.
பல கோடி மதிப்பிலான நில பிரச்சனை காரணமாக நடந்ததாகக் கருதப்படும் இந்தக் கொலைகளிலும் சண்முகசுந்தரம் மர்மச் சாவிலும் அரசியல் புள்ளிகளுக்குத் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.
விசாரணையை நடத்திய சிபிசிஐடி போலீசார் இதற்கு நிலப் பிரச்சனையே காரணம் என்றும், அரசியல் பின்னணி ஏதும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும் சண்முகசுந்தரம் மீது பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
சண்முகசுந்தரத்தின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் அவர் பீகார் சென்று வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. வீட்டிலிருந்து பல கள்ளத் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும் சில பீகார் தொலைபேசி எண்களும் சிக்கின. இதனால் பீகாரை சேர்ந்த கள்ளத் துப்பாக்கி விற்பனைக் கும்பலுக்கும் சண்முகசுந்தரத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான டீம் பீகார் விரைந்தது. அம் மாநில போலீசார் உதவியுடன் சண்முகசுந்தரத்துக்கு கள்ளத் துப்பாக்கிகளை வழங்கிய கும்பலைச் சேர்ந்த முகமது பள்ளு (53), சகோதரர்களான நீரஜ்குமார் நிரானா (28), தேவ்சந்தர் குமார் (20) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரித்ததில் கொலையாளி சண்முகசுந்தரம் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் பீகார் சென்று நீரஜ்குமாரை சந்தித்துப் பேசியதும், இருவரும் முகமது பள்ளுவை சந்தித்து ரூ. 8,000க்கு கள்ளத் துப்பாக்கி வாங்கியதும் தெரிவந்தது.
கைது செய்யப்பட்ட 3 பேரும் பீகாரில் உள்ள முஸ்கேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று அதிகாலை ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
கிண்டியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து 3 பேரிடமும் விசாரணை நடந்தப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications